நமக்கு வந்த News..நாம கேட்ட Talks..
“நோய் தீர்க்க போனவரின் நோயை தீர்த்து, அவரது மனம் அறிந்து அவருக்காக படம் தயாரித்து நோயாளியாக வந்தவரின் இயக்குநர் கனவை நினைவாக்கிய மருத்துவர் !”
-‘சீசா’ திரைப்பட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள் !!
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர் கே.செந்தில் வேலன் தயாரித்திருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குநர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் செந்தில் வேலன் எழுதியிருக்கிறார். இதில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, தயாரிப்பாளர் செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
சரண் குமார் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வில்சி ஜெ.சசி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சீசா’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் கஸ்தூரி ராஜா, பேரரசு, மைக்கேல், தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
இவ்விழாவினில் …
இயக்குநர் கஸ்தூரி ராஜா பேசுகையில், “ஒரு படத்தை ஆக்குவதும், உருவாக்குவதும் மீடியாக்கள் கையில் தான் இருக்கிறது. இப்போது என் பேரன் கூட நடிக்க வந்திருக்கிறார், இந்த அளவுக்கு என் குடும்பம் சினிமாவில் உயர்ந்ததற்கு மீடியாக்கள் தான் காரணம். முதலில் இங்கு நன்றி சொல்ல வேண்டியது தயாரிப்பாளர் செந்தில் வேலனுக்கு தான். ஒரு தயாரிப்பாளர் திடீரென்று மருத்துவம் பார்க்க முடியாது, ஆனால் ஒரு மருத்துவர் படம் தயாரித்திருக்கிறார். இன்றைய சுழலில் ஒரு படம் தயாரிப்பது என்பது சாதாரண விசயம் இல்லை. அனைத்தும் இருப்பவர்களால் கூட இன்று படம் தயாரிப்பு என்பது கஷ்ட்டமான விசயமாக இருக்கிறது. எதுவுமே இல்லாமல், இவ்வளவு முதலீடு செய்து, படத்தை இந்த அளவுக்கு கொண்டு வருவதற்கு அவர் எத்தனை கஷ்ட்டங்களை கடந்து வந்திருப்பார், என்பது கடவுளுக்கு தான் வெளிச்சம். பாடல்கள் நன்றாக இருக்கிறது, இசை, பாடல் வரிகள் என அனைத்தும் நன்றாக இருக்கிறது, எனவே பத்திரிகையாளர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். இந்த படம் வெற்றி பெற்று டாக்டர் சம்பாதித்தால், நிச்சயம் அடுத்த படம் எடுப்பார், அதில் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நம்புகிறேன்.இயக்குநர் குணா குடும்ப கஷ்ட்டத்தை பற்றி பேசினார். சினிமாவில் இருப்பவர்களை கோழையாக்குவது குடும்ப கஷ்டம் தான். ஓட்டப்பந்தயத்தில் முதுகில் மூட்டையை கட்டிக்கொண்டு ஓடுவது போல தான் சினிமாக்காரர்களுக்கு குடும்பம் இருப்பது. நானும் அந்த கஷ்ட்டத்தை அனுபவித்திருக்கிறேன். அதே சமயம், சினிமா தன்னை தானே ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும். அதற்கு தகுதியானவரை அது தானாக தேர்ந்தெடுக்கும். அப்படிதான் நானும் சினிமாவுக்குள் வந்தேன். கிராமத்தை சேர்ந்த நான் சென்னை என்றால் என்ன?, யாரை பார்க்க வேண்டும், என்று எதுவுமே தெரியாமல் சென்னை வந்தேன். சென்னை வந்து வண்ணாரப்பேட்டை சென்றதும் நான் இறங்கிய இடம் மகாராணி தியேட்டர். அங்கிருந்து நான் போக வேண்டிய முகவரியை தேடிய போது திரும்ப திரும்ப அந்த தியேட்டர் முன்பே வந்து நின்றேன். ஒரு தாய் வயிற்றில் இருந்து எப்படி பிறந்தோமோ அப்படி தான் நான் சென்னை வந்தேன். என் கண் முன் தெரிந்த அந்த மகாராணி தியேட்டர் தான் நான் சினிமாவில் வருவதற்கான முதல் சிக்னல் என்று இன்றும் நினைப்பேன். அதனால், உழைப்பும், சோர்வின்மையும் நம்மிடம் இருந்தால் நம்மை எந்த கொம்பனும் அசைக்க முடியாது. நம்முடைய நாற்காலியில் யாராலும் உட்கார முடியாது. அப்போது கூட நான் வேறு வேலைகளை தான் தேடி அலைந்தேனே தவிர சினிமாவில் வாய்ப்பு தேடவில்லை. அப்படி இருந்தும் சினிமா என்னை அழைத்தது. சினிமாவில் இருக்கும் வசதிகள் எங்கும் இல்லை, அதே சினிமாவுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோமா?, இன்றும் என் பிள்ளைகள் என்னை படம் எடுக்க சொல்கிறார்கள், நான் தான் வேண்டாம்… என்று சொல்கிறேன். ஒரு தயாரிப்பாளர் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டால் தான், அந்த படத்தில் பணியாற்றியவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள். 50 லட்சம் ரூபாய் செலவு செய்தால், அதில் 15 லட்சம் தான் படத்திற்கு செலவு செய்யப்படும் நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் டாக்டர் செந்தில் வேலன் தைரியமாக படம் தயாரித்திருக்கிறார், அவரை பாராட்ட வேண்டும். சிறிய படம், பெரிய படம் என்று இப்போது சொல்லக் கூடாது, தியேட்டருக்கு வந்தால் தான் தெரியும். இப்போது பல பெரிய படங்கள் சின்ன படங்களாகி விட்டது, சிறிய படங்கள் பெரிய படங்களாகி விட்டது. இசையமைப்பாளர் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார், செந்தில் வேலனின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.
இயக்குநர் குணா குடும்பம் இருக்கிறது, என்று வருத்தமடைய வேண்டாம். நீங்க பட்ட கஷ்ட்டத்துக்கு நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். நானும் 39 வயதில் தான் என் முதல் படம் எடுத்தேன். எனக்கு இளையராஜா என்ற ஒரு தெய்வம் கிடைத்தார். ராஜ்கிரண் என்ற இஸ்லாமிய கடவுள் எனக்கு வரம் கொடுத்தார். இதையெல்லாம் மீறி அந்த படத்தை ரசிக்கும் ஆடியன்ஸ் இருந்தார்கள். ஆனால், இன்று , அந்த படத்தை எடுத்தால் ஓடாது. இன்றைய ஆடியன்ஸ்களுக்கு என்ன தேவையோ அதை படமாக எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அதனால் நீங்க பயப்பட வேண்டாம், படம் நிச்சயம் வெற்றி பெறும். பத்திரிகையாளர்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.” என்றார்.
கே.ராஜன் பேசுகையில், “சின்ன படங்கள் பெரிய படங்களாக வேண்டும், அதற்காக இதுபோன்ற படங்களை வாழ்த்த வேண்டும், என்பதால் தான் இங்கே நான் வந்திருக்கிறேன். தயாரிப்பாளர் ஒரு மருத்துவர், அவர் அந்த வேலையை மட்டும் பார்க்காமல், கதை, கவிதை எழுதும் வேலையையும் சேர்த்து பார்த்திருக்கிறார். இயக்குநர் குணா நோயாளியாக சென்ற போது அவரை பற்றி தெரிந்துக் கொண்டு, இந்த படம் தயாரித்திருக்கிறார். இன்று இந்த உலகத்தில் எவ்வளவோ பார்க்கிறோம், துரோகம் செய்வதை தான் அதிகம் பார்க்கிறோம். ஆனால், நோய் தீர்க்க போனவரின் நோயை தீர்த்து, அவரது மனம் அறிந்து அவருக்காக படம் தயாரித்த செந்தில் வேலன் சிறப்பாக வாழ வேண்டும், என்று வாழ்த்துகிறேன். அவர் ஒரு தெய்வ பிறவியாக குணாவுக்கு கிடைத்திருக்கிறார். அனைத்தையும் பாசிட்டிவாக நினைக்க வேண்டும். நாம் வளர வேண்டும், நீங்க வளர வேண்டும், நாடு வளர வேண்டும் என்று நினைக்க வேண்டும், அப்போது தான் நம் வாழ்க்கை சிறப்பாக அமையும். எனவே, இந்த சிறிய படம் பெரிய படமாக வேண்டும், என்று இறைவனிடம் வேண்டி வாழ்த்துகிறேன், நன்றி.” என்றார்.
தயாரிப்பாளர் டாக்டர் ஜே.செந்தில் வேலன் பேசுகையில், “நான் சினிமா துறைக்கு புதியவன். எனக்கும் சினிமாவுக்கும் ரொம்ப தூரம். 12ம் வகுப்பு படிக்கும் வரை மொத்தமாக நான்கு திரைப்படங்கள் தான் பார்த்திருக்கிறேன். கல்லூரி சென்ற போது தான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்தது. என் கேரில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் இருக்கிறார்கள், காலை 9 மணிக்கு மருத்துவமனை சென்றால் இரவு 12 மணி வரை பணியாற்றுவேன். இந்த படத்தின் கதை, எடிட்டிங் உள்ளிட்ட அனைத்திலும் என் பங்களிப்பு இருக்கிறது. இரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சினிமா வேலையை பார்க்கிறேன். ஜனவரி 3 எப்போது வரும் என்று என் மனைவி எதிர்பார்க்கிறார், அப்போதாவது நான் பழையபடி இருப்பேன் என்பதால் தான்.
நீங்கள் நினைப்பது போல் சினிமா சாதாரணமான வேலை கிடையாது. கொத்தனார், சித்தாள் வேலையை விட சினிமா வேலை கடினமானது. அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கிறார்கள், 6 மணிக்கு வண்டி பிடித்து படப்பிடிப்புக்கு செல்கிறார்கள். லைட் மேன் உள்ளிட்ட உதவியாளர்கள் மிக கடுமையாக உழைக்கிறார்கள். இவர்கள் மனிதர்களா மிஷன்களா என்று தெரியாத அளவுக்கு மிக கடுமையாக வேலை செய்கிறார்கள். ஆனால், நமக்கு இந்த கஷ்ட்டங்கள் எதுவுமே தெரியவில்லை. சினிமா என்றால் ஜாலி, ஒரே கூத்து கும்பாளமாக இருக்கும் என்று நினைக்கிறோம். கதை விவாதம் எடுத்துக் கொண்டால் கூட செத்து சுண்ணாம்பாகி விடுகிறோம். ஒரு படம் எடுக்கவே எனக்கு இப்படி இருக்கிறதே, மேடையில் இருப்பவர்கள் இத்தனை படங்களை எப்படி தான் எடுத்தார்களோ.
இயக்குநர் குணா குடிபோதைக்கு அடிமையாகி என்னிடம் வந்தார். அவர் யார் சொல்வதையும் கேட்காத ஒரு நிலையில் இருந்தார். 8 வயதில் ஆர்ம்பித்த சினிமா ஆசையால் அவர் பல தோல்விகளை சந்தித்து, எந்த வேலையும் செய்ய முடியாத ஒரு நிலையில் இருக்கிறார். அவர் முதல் முறையாக மற்றவர் சொல்வதை கேட்டது என்னிடம் தான். அப்போது என்னிடம் ஏதோ தெய்வ சக்தி இருக்கிறது, நீங்க சொல்வதை நான் கேட்கிறேன், என்று சொன்னவர். இதை இந்த அறையில் மட்டும் செய்யாமல் அனைவரும் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று சொன்னார். அதற்காக என்னை வைத்து ஒரு வீடியோ எடுத்தார். அந்த வீடியோவுக்காக லொக்கேஷன், எனக்கு மேக்கப் என்று என்ன என்னவோ செய்து எடுத்தார். அந்த வீடியோவை பார்த்து நான் பிரமித்து விட்டேன், அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. அந்த வீடியோ தான் குடி பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு ஒரு குறும்படம் எடுத்தோம், அனைத்தையும் மென்மையாக சொல்லக்கூடியவர். பிறகு படம் எடுக்கலாம் என்று சொல்லி, என்னிடம் தொடர்பில் இருந்தார். படம் தொடங்கலாம் என்று நான் சொன்ன பிறகு பதற்றமடைந்து விட்டார், அதனாலேயே அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு விட்டது. உடனே அவரை அழைத்து, எந்த காலத்திலும் என் காசை ஏமாற்றி விட்டதாக சொல்ல மாட்டேன். படம் ஜெயிக்க வில்லை என்றால் நமக்கு அதிஷ்ட்டம் இல்லை என்று நினைத்துக் கொள்வோம். தோல்வியை சந்திக்காத மனிதர்களே இல்லை, அதனால் எந்தவித பதற்றமும் இன்றி இந்த படத்தை பண்ணுங்க, என்று சொன்னேன். எனக்கு செலவு வைக்க கூடாது என்று கடந்த மூன்று மாதங்களாக இட்லியும், தயிர் சாதமும் தான் சாப்பிடுகிறார், நானும் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. தயாரிப்பாளருக்கு செலவு வைக்க கூடாது என்று இப்படி செய்கிறார். நட்டி சாரை இயக்க வேண்டும் என்பது அவரது ஆசை, ஆனால் அவர் ஒகே சொன்னவுடன் பதற்றமடைந்து விட்டார். அதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அந்த நிலையிலேயே படம் எடுத்தார். குணா எப்படிப்பட்டவர் என்றால் சினிமாவுக்காக சாக கூடியவர். ஐந்து பைசா கூட எதிர்ப்பார்க்காமல் சினிமாவுக்காக வாழும் ஒரு நபர் அவர். நானும் இந்த சமூகத்தில் இருந்து தான் முன்னேறியிருக்கிறேன். அப்படிப்பட்ட சமூகத்திற்கு எதையாவது செய்ய வேண்டும் என்பதால் தான் நான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன். நாங்கள் இணைந்து சிறிய வீடு கட்டியிருக்கிறோம், அதற்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேடுக்கொள்கிறேன்.
நடிகர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் நட்டி சார் மிக சிறந்த மனிதர். அவர் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார். கேரவேன் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை, ரோட்டில் ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பார். அவர் ஒரு தயாரிப்பாளரின் நடிகர் என்று தான் சொல்ல வேண்டும். நிஷாந்த், பாடினி உள்ளிட்ட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தொகுப்பாளரை கசக்கி பிழிச்சி காயப்போட்டிருக்கிறேன். என் இசையமைப்பாளர் திறமையானவர், ஆனால் நாம் கேட்கும் போது பாடல்கள் கொடுக்க மாட்டார். தீபாவளிக்கு பேண்ட் கேட்டால் பொங்கலுக்கு தான் கொடுப்பார், அது ஒன்று தான் அவரது பிரச்சனை. மற்றபடி சிறந்த இசையமைப்பாளர் அவர், எம்.எஸ்.வி உடன் அவரை ஒப்பிடலாம் அந்த அளவுக்கு சிறந்த இசையமைப்பாளர். இவர்களுடன் சேர்ந்து மீண்டும் படம் பண்ணுவேன். ஆறு கதைகள் வைத்திருக்கிறேன், அதில் ஒன்றில் மீண்டும் நட்டி சார் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில், வெற்றி தோல்வியை பார்த்து நானும், இயக்குநரும் பயப்பட போவதில்லை. நிச்சயம் தொடர்ந்து படம் பண்ணுவோம், நன்றி.” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், “இந்த படத்திற்காக நான் இயக்குநர் குணாவை சந்தித்த போது, அவர் ஒன்றரை மணி நேரம் கதை சொன்னார். கதையில் அவர் மருத்துவம் சார்ந்த பல விசயங்களை மிக சரியாக கையாண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இந்த கதையை புடிச்சீங்க, என்று கேட்டேன். அப்போது தான் அவர் தயாரிப்பாளர் தான் கதை எழுதியதாக சொன்னார். அந்த கதையை அவ்வளவு சாதாரணமாக சொல்ல முடியாது, யோசிக்க முடியாது. பைபோல் டிசாடர் என்பது எப்படி வேண்டுமானாலும் வரலாம். அதை மிக சரியாக கதையில் கையாண்டிருக்கிறார்கள். இயக்குநர் குணா உடல்நிலை பாதிக்கப்படும் போது கூட மன சிதைவு எத்தகைய நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த கதையில் சொல்லப்பட்டிருக்கும் விசயங்களை இதுவரை யாரும் கையாண்டதில்லை. சில படங்களில் லேசாக சொல்லியிருந்தாலும், இந்த படத்தில் அதை மிக சிறப்பாக முழுமையாக செய்திருக்கிறார்கள். செந்தில் வேலன் சார் வைத்திருக்கும் ஆறு கதைகளிலும் நடிக்க நான் ரெடியாக இருக்கிறேன். நான் பல படங்களில் போலீஸாக நடித்திருக்கிறேன், ஆனால் இந்த படத்தின் போலீஸ் வேடத்தை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்கள், அதற்கு கதை எழுதியிருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் குணா பல திறமைகள் கொண்டவர். அவர் ஒரு ஓவியர், கவிதை எழுதுவார், நடனம் ஆடுகிறார், அவர் நிச்சயம் நல்ல நிலைக்கு வருவார். என்னுடன் இணைந்து நடித்த ரூசோ சிறந்த நடிகர். அவர் நடித்த வேடம் எனக்கு கொடுத்திருந்தால் தெறித்து ஓடியிருப்பேன். அந்த அளவுக்கு கஷ்ட்டமான வேடம் அது, அதை அவர் சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை பாடினியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு இல்லை, ஆனால் அவரது காட்சிகளை பார்த்து மிரண்டு விட்டேன், ஒரே ஷாட்டில் அந்த காட்சிகளில் நடித்ததாக சொன்னார்கள், சிறப்பாக இருந்தது.
இந்த படத்தை வாழ்த்த வந்த கஸ்தூரி ராஜா சார், கே.ராஜன் சார், இயக்குநர் மைக்கேல், பேரரசு சார் ஆகியோருக்கு நன்றி. இசையமைப்பாளர் சிறப்பான பாடல்கள் கொடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் பேசும் போது, தீபாவளி ஃபேண்ட் கேட்டால் பொங்கலுக்கு கொடுப்பதாக சொன்னார். ஆனால், இந்த கதையை புரிந்துக்கொண்டு இசையமைப்பது ரொம்ப கஷ்ட்டம், அதற்கு காலதாமதம் நிச்சயம் ஆகும். சுகுணா மேடமுக்கு சினிமா புதிது என்றாலும் ஒரு வாரத்தில் அதை கற்றுக்கொண்டார். இங்கு என்ன நடக்கிறது, எப்படி கையாள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டு சிறப்பாக பணியாற்றினார் அவருக்கு நன்றி. யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல் குணா படத்தை சிறப்பாக கையாண்டுள்ளார். படம் நன்றாக வந்திருக்கிறது, நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி.” என்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் இசை குறுந்தகட்டை இயக்குநர் கஸ்தூரி ராஜா வெளியிட கே.ராஜன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில், முன்னதாக இயக்குநர்கள் பேரரசு, மைக்கேல், இப்பட இயக்குநர் குணா சுப்பிரமணியம்,
இசையமைப்பாளர் சரண் குமார்
நாயகி பாடினி குமார் , நடிகர்கள் நிஷாந்த் ரூசோ ஆதேஷ் பாலா, மூர்த்தி உள்ளிட்டோரும் படம் குறித்து பேசினர்.குடி அடிமையாக சிகிச்சை பெற வந்தவரின் மனதில் குடி கொண்டிருந்த சினிமா இயக்கும் ஆசை யை கண்டு பிடித்து அவருக்கு குடி அடிமை தனத்தில் இருந்து மறுவாழ்வு தந்து, அவருக்கு சினிமா இயக்குனராக வாழ்வும் தந்த டாக்டர் செந்தில் வேலன் ரியலி கிரேட் தானே .?!
😍😄😃😄😃😄😃😇😄😃😄😃😄😍